Showing posts with label திருக்குறள் - மேற்கோள். Show all posts
Showing posts with label திருக்குறள் - மேற்கோள். Show all posts

Sunday, 4 December 2016

அளபெடை

தாம் கொண்ட ஓசையளவை விடக் குறைந்து ஒலிக்கும் எழுத்துகளான குற்றியலுகரம், குற்றியலிகரம் பற்றி இதுவரை கண்டோம். இனி, பாட்டிலோ உரையிலோ, ஓசை குறைந்த இடங்களில், அல்லது, ஓசை இனிமை வேண்டி, அல்லது, பெயரை வினையாக ஆக்க, சில உயிரெழுத்துகளும் ஒற்று எழுத்துகளும் (மெய் எழுத்துகள்), தம் மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும். அவ்வுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் ஒற்றெழுத்துக்கு ஒற்றளபெடை என்றும் பெயராம் என்க.
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
இக்குறளில் உள்ள ஓ எனும் நெடில் தனக்குரிய அளவான இரண்டு மாத்திரை அளவுக்கு ஒலிக்காது, நீண்டு, மூன்று மாத்திரை அளவு ஒலிப்பதாக உள்ளது காண்க. இதுவே உயிரளெபடை ஆகும்.

இங்கு ஓஒ என்பதில் முதலில் உள்ள ஓகார நெடிலை மட்டுமே நீட்டி ஒலித்தல் வேண்டும் என்றும், அதன் பின் உள்ள ஒகரம் என்பது அளபெடைக்கான குறியீடு மட்டுமே என்றும், அந்த ஒகரம் எனும் எழுத்தை ஒலித்தல் கூடாது என்றும் மனத்தில் இருத்துக.

இதே போல, இரண்டாம் அடியில் உள்ள 'தாஅம்' என்பதில் உள்ள தா எனும் உயிர்மெய்யெழுத்தின் ஆகாரம் மூன்று மாத்திரை அளவு நீண்டு ஒலிப்பதாகும் என்க. இங்குள்ள ஓஒ மற்றும் தாஅ இரண்டும் உயிரளபெடைகளாம் என்க. இவ்வளபெடைகளை அறிவிக்கும் குறியீடுகளாக, அளபெடுக்கும் நெடிலின் இனமான குறிலெழுத்து எழுதப்படும் என்க.
ஓஒ
தாஅ
என்றவாறு. இக்குறியீடுகளை ஒலித்தல் கூடாது. இக்குறியீடுகளின் அளவுக்கு முன்னுள்ள எழுத்தை நீட்டி ஒலிக்க வேண்டுமென்க. சில வேளை, குறில் நெடிலாகிப் பின்னர் அளபெடுக்கும்.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
இக்குறளில் அறளழீஇ புறனழீஇ என்பவற்றுள், அறனழி புறனழி என்ற இயல்பான சொற்களில் உள்ள ழி எனும் உயிர்மெய்க்குள் உள்ள இகரம், தன் அளவான ஒரு மாத்திரை அளவு ஒலிக்காது, நெடிலாகிப்பின் நீண்டு அளபெடுத்து, மூன்று மாத்திரை அளவு ஒலிப்பதைக் காண்க.
ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையினும் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும்.
எ-டு.
சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்ந்த.

குற்றியலிகரம்

உகரம் குறுகி அரைமாத்திரை ஒலித்துக் குற்றியலுகரமாதல் போல, இகரமும் குறுகி, குற்றியலிகரமாக, சிலவிடங்களில் அரைமாத்திரை ஒலிக்கும் என்க. குற்றியலுகரத்தில் முடியும் சொற்களை அடுத்து, யா எனும் யகர உயிர்மெய்யில் தொடங்கும் சொற்கள் வந்தால், நிலைமொழி முன்னால் நிற்கும் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரியும் என்க.

காட்டு:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
                                          - திருவள்ளுவர்.

இங்கு 'எனப்படுவது' எனும் சொல்லின் ஈற்றெழுத்தான உகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரமன்றோ. அதனை அடுத்து, யாதெனின் எனும் யகர மெய் வந்ததால்.

"எனப்படுவ தியாதெனின்" எனத் திரிந்து,
'தியாதெனின்' எனும் சீரின் முதல் இகரம், அரை மாத்திரை ஒலிக்கும் குற்றியலிகரமாக ஆகுமென்க. இதுவே குற்றியலிகரம் எனும் சார்பெழுத்து பிறக்கும் வழியாம் என்க.