உகரம் ஒரு மாத்திரை உடையது. உகர உயிர் ஏறிய உயிர்மெய்களுக்கும் மாத்திரை ஒன்றே. புதை என்ற சொல்லின் முதலில் உள்ள பு எனும் உகர உயிர்மெய்யும்; உரு எனும் சொல்லில் முதலில் உள்ள உகர உயிரும், இறுதியில் ரு எனும் உகர உயிர்மெய்யும்; தொடுகை எனும் சொல்லில் உள்ள டு எனும் உகர உயிர்மெய்யும்;இவை எல்லாம் ஒரு மாத்திரை ஒலிப்பனவே என்பதைப் பலுக்கிப் பார்த்து உணர்க. (பலுக்கி - உச்சரித்து)
ஆனால்,
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
என்ற பாட்டில் ஆடு என்பதிலுள்ள டு எனும் எழுத்தை, ஒரு மாத்திரை அளவு ஒலிக்கிறோமா... அவ்வாறு ஒலிப்பாரைப் பார்த்து நகைப்போம் இல்லையா..
இவ்வாறு சில வேளை, சில இடங்களில், உகரமானது ஒரு மாத்திரை அளவு ஒலிக்காது, குறுகி, அரை மாத்திரையே ஒலிக்கும், தமிழின் தனிச்சிறப்பே, குற்றியலுகரமாகும் என்க.
இனி, இவ்வாறு எந்த எந்த இடத்தில் எந்த எந்த உகரம் குறுகி ஒலிக்கும் என்பதற்குத் தமிழில் தெளிவான
வரையறை உண்டு என்றறிக.
அவையாவன,
- வல்லின மெய்களில் ஏறிய உகரமே இவ்வாறு குறுகும் என்க. அதாவது, கு சு டு து பு று என்ற ஆறு மட்டுமே குற்றியலுகரங்களாய் வரும் தகுதி கொண்டவை என்க.
- அவ் வல்லின உகரங்கள் சொல்லின் ஈற்றெழுத்தாக (கடைசி எழுத்தாக), வரும் பொழுதே குறுகி ஒலிக்கும் என்க.
- அதுவும் தனிக்குறிலை அடுத்து வந்தால் குறுகாது என்றறிக. (குறு, மெது, அது...)
மேற்கண்ட மூன்று வரையறைகளைக் கொண்டு குற்றியலுகரங்களைக் கண்டு கொள்ள வேண்டும் என்க. இவை தமிழர்களாகிய நமக்குப், பேசும்போது, இயல்பாகவே வந்துவிடுவதாகும். எழுதும்போது இனங்கண்டு கொள்ளும் வேலை மட்டுமே செய்ய வேண்டும் என்றுமறிக. அதாவது
- கு சு டு து பு று எனும் எழுத்துகளே குற்றியலுகரமாக வரக்கூடியவை...
- அவையும் சொல்லின் ஈற்றெழுத்தாக வரும் போது மட்டுமே, குறுகி, 'குற்று இயல் உகர'மாகும். மற்ற வேளையில் 'முற்று இயல் உகர"மாகவே நின்று ஒரு மாத்திரை ஒலிக்கும்.
- அவ்வாறு சொல்லின் ஈற்றெழுத்தாக வரும்போது இரண்டெழுத்துச் சொல்லானால், தனிக்குறிலை அடுத்து வந்தால் குற்றியலுகரமாகாது.
எடுத்துக்காட்டு :- தடு, பொறு, எடு, படு.
எனவே, இரண்டெழுத்துச் சொற்களில், நெடிலையடுத்து வரும் குசுடுதுபுறுக்கள் குற்றியலுகரங்களாகும் என்க. இவை நெடிற்றொடர்க் குற்றியலுகரங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:- ஏகு, பேசு, போடு, ஊது, ஆறு..
(தமிழில் மெய்யெழுத்துகளை முதலாகக் கொண்டு எந்த சொல்லும் தொடங்காது என்பதால், இரண்டெழுத்துச் சொற்கள் குறிலைக் கொண்டோ நெடிலைக் கொண்டோதான் தொடங்க வேண்டும் என்றறிக)
இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட சொற்களின் இறுதி எழுத்தாக 'குசுடுதுபுறு'க்கள் வரும்போது குற்றியலுகரங்களாகும் என்க.
எடுத்துக்காட்டு:-
பத்து, பகட்டு, படிக்கட்டு
பந்து, பறந்து, மகிழுந்து
கொய்து, வலநேர்பு, அப்போழ்து
அஃது, கஃசு, எஃகு
பொழுது, விளையாடு, குறளமுது
இவையனைத்தும் குற்றியலுகரங்களால் முடியும் சொற்களாம. இச்சொற்களின் ஈற்று உகரமே குற்றியலுகரமாம். அவ்வுயிர்மெய்யுகரம் எதனை அடுத்து வருகின்றதோ அதன்வழி பெயர் பெறும் என்க...
- பத்து, பகட்டு, படிக்கட்டு - வல்லின மெய்களை அடுத்து வந்தமையால் இவை வன்றொடர்க் குற்றியலுகரத்தில முடியும் சொற்கள்.
- பந்து, பறந்து, மகிழுந்து - மெல்லின மெய்களை அடுத்து வந்தமையால் இவை மென்றொடர்க் குற்றியலுகரத்தில் முடியும் சொற்கள்.
- கொய்து, வலநேர்பு, அப்போழ்து - - இடையின மெய்களை அடுத்து வந்தமையால் இவை இடைத்தொடர்க் குற்றியலுகரத்தில முடியும் சொற்கள்.
- அஃது, கஃசு, எஃகு - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்.
- பொழுது, விளையாடு, குறளமுது - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.
இதுவரை, குற்றியலுகரம் எனும் சார்பெழுத்து என்னவென்று கண்டோம். பண்டைக் காலங்களில், குற்றியலுகரங்கள், மெய்யெழுததுகளைப் போல மேலே புள்ளியோடு எழுதப்பட்டன என்றறிக. சோம்பலாலோ, பிற காரணங்களாலோ இம்முறை ஒழிந்ததென்க.
இன்றும், பாட்டெழுதிப் பழகும் பாவலர்கள் இம்முறையைப் பேணி எழுதிப் பழகின், நல்ல பயிற்சியாய் ஆகுமென்க.
No comments:
Post a Comment