Saturday, 26 November 2016

மாத்திரை

மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று,
நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.
உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை ஒன்று;
உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின் அளவாகிய மாத்திரை இரண்டு.
மாத்திரை என்பது எழுத்தை ஒலிக்கும் கால நேரத்தை வரையறை செய்யும் கருவியாகும்.
இயல்பாக, மேற்சொன்ன மாத்திரை அளவில் ஒலிக்கும் எழுத்துகள், பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், அராகத்திலும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.
உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் ஆக முப்பதே தமிழின் முதல் எழுத்துகள் என்று கண்டோம். இந்த முப்பது ஒலிகளை வைத்து மட்டுமே இயங்குவதே நம் தாய்மொழியான தமிழ் என்க.

எழுத்திலக்கணம்: இனவெழுத்துகள்

இன வெழுத்து என்றால் என்ன:
ஒரே இடத்திலும் ஒரே போன்ற முயற்சியாலும் பிறந்த எழுத்துகள், இனவெழுத்துகளாம்
அகரத்துக்கு ஆகாரமும்,
இகரத்துக்கு ஈகாரமும்,
ஒகரத்துக்கு ஓகாரமும்,
உகரத்துக்கு ஊகாரமும்,
எகரத்துக்கு ஏகாரமும்,
ஐகாரத்துக்கு இகரமும்,
ஒகரத்துக்கு ஓகாரமும்,
ஒளகாரத்துக்கு உகரமும்,
ககரத்துக்கு ஙகரமும்,
சகரத்துக்கு ஞகரமும்,
டகரத்துக்கு ணகரமும்,
தகரத்துக்கு நகரமும்,
பகரத்துக்கு மகரமும்,
றகரத்துக்கு னகரமும்,
இன வெழுத்துக்களாம்.

இடையெழுத்தாறும், ஓரினமாகும்.
ககரத்துக்கு ஙகரமும், (அங்கு, பொங்கு)
சகரத்துக்கு ஞகரமும், ( மஞ்சள், பிஞ்சு)
டகரத்துக்கு ணகரமும், (கண்ட, உண்ட)
தகரத்துக்கு நகரமும், (அந்த, இந்த)
பகரத்துக்கு மகரமும், (வம்பன், அம்பு)
றகரத்துக்கு னகரமும், (மன்றம், கொன்று)
இவற்றை அக்காள் தங்கை என்று நினைத்துக் கொள்க...

ன் - வருமா, ண் - வருமா, ந் - வருமா என்ற குழப்பங்கள் வரும்போது, அக்காள் தங்கை என்ற நினைவு பயன்படும்.
 

இளமைப்பெயர்கள்

பறவைகள்,ஊர்வன - பார்ப்பு, பிள்ளை
பறவைகள், நண்டு, மீன், தேள் - குஞ்சு
காக்கை, கிளி, கீரி - பிள்ளை
மூங்கா, வெருகு - குட்டி,பறழ்
அணில் - குட்டி, பறழ், பிள்ளை
எலி - குட்டி, குஞ்சு
பன்றி, புலி, முயல், நரி -குருளை, குட்டி, பறழ், பிள்ளை
நாய்- குருளை,குட்டி,பறழ்
ஆடு,குதிரை,நவ்வி,உழைபுல்வாய்,மான்,அழுங்கு - மறி
குரங்கு - குட்டி, மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு
ஆடு, குதிரை, மான் - குட்டி
யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம் - கன்று
யானை, ஆ, எருமை, கடமை,மரை, குரங்கு, முசு, ஊகம் - குழவி
யானை - கயந்தலை, களபம், கன்று
அரிமா, ஒநாய் - குருளை, குட்டி
மாந்தன் - குழவி, மகவு, பிள்ளை, சேய், குழந்தை, பாப்பா
ஆளி - ஆணங்கு
கரடி -குடாவடி, குட்டி
காசறை(கத்தூரிமான்) - கரு
நாவி(புனுகுபூனை) - பிள்ளை
உடும்பு, ஒணான், பாம்பு - குட்டி
மாடு, எருமை - கன்று
பூனை, வாவல்(வௌவால்) - குட்டி
பேன் - செள்
பயிர்கள், செடிகள் - நாற்று
மரங்கள் - கன்று
தென்னை - பிள்ளை

பொதுவாக, முட்டையிடுபவற்றின் இளமைப்பெயர் குஞ்சு என்பதும், நேரடியாக ஈனுபவற்றின் இளமைப்பெயர் குட்டி என்பது மாகும்.

எழுத்திலக்கணம்: உயிர்மெய் எழுத்துகள்

உயிர்மெய் எழுத்துகள்
தமிழ் உயிர்மெய் எழுத்துகள் பட்டியல்
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

எடுத்துக்காட்டு:

'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பதினெட்டு மெய் எழுத்துகளுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.

எடுத்துக்காட்டு
கீழேயுள்ள அட்டவணையின் மெய்யெழுத்து "க்" உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய்யாகும் வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.

அமைப்பு உயிர்மெய் வடிவம்
க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
க் + உ = கு
க் + ஊ = கூ
க் + எ = கெ
க் + ஏ = கே
க் + ஐ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ

எழுத்திலக்கணம்: எழுத்துகள்

உயிரெழுத்துகள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துகளும் ஆகும். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----
உயிரெழுத்துகள், குற்றெழுத்து (குறில்), நெட்டெழுத்து (நெடில்), என இரண்டு வகைப்படும்.
-----
குற்றெழுத்துகள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----
நெட்டெழுத்துகள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழுமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்.
-----
மெய்யெழுத்துகள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டு எழுத்துகளும் ஆகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----
மெய்யெழுத்துகள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----
வல்லெழுத்துகள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----
மெல்லெழுத்துகள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----
இடையெழுத்துகள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
----
உயிர் எழுத்துகளுக்கு 'உயிர்' என்றும் மெய் எழுத்துகளுக்கு 'மெய்' என்றும் 'உடம்பு' என்றும் தமிழர் பெயர் கொடுத்தது ஏன்?
உயிர் இனங்கள் அனைத்தும் உடல், உயிர் ஆகிய இரண்டையும் கொண்டு விளங்குகின்றன. உயிருள்ள உடலையும் உயிர் இல்லாத உடலையும் நம்மால் பிரித்து அறிய முடிகின்றது.

இதனால்,
  1. உயிர்
  2. உடல்
  3. உயிரும் உடலும் இணைந்த உயிரினம்

ஆகிய மூன்றையும் நம்மால் தனித்தனியாகப் பிரித்து அறிய முடிகின்றது. இந்தப் பிரிவின்படி தமிழ் எழுத்துகள், உயிர், மெய் (உடல்), உயிர்மெய் என்று பிரிக்கப்பட்டு
  1. உயிர் எழுத்து
  2. மெய் எழுத்து
  3. உயிர்மெய் எழுத்து
என்று குறிக்கப்படும் பாங்கு எண்ணிப் பார்க்கத்தக்கது ஆகும்.
க், ங், ச், ஞ், என்ற உயிர்மெய்களை உயிர் எழுத்துகளின் உதவியின்றி சொல்லவே முடியாது.
க் என்பதை, 'இக்கு' என்று நாம் சொல்லும்போதும், இகர உயிரையும் உகர உயிரையும் சேர்த்தே பலுக்குவதைக் காண்க.

இதனால் இவை உடம்பு எனவும் மெய் எனவும் அழைக்கப்பட்டன.
உயிர் ஏறிய மெய்கள் உயிர்மெய்களாகும். உயிர்மெய் என்பது, பிராணி என்ற அயற்சொல்லால் அழிக்கப்படும் முன், அந்தப் பொருளில் வழங்கி வந்த ஒன்றே ஆகும்.
உயிர் மெய்யெழுத்துகளாவன. பன்னிரண்டு உயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.
  • உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு;
  • உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு;
  • ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
  • உயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு,
  • உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு,
  • உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு,
ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----
உயிர்மெய் என்பது உயிர் ஏறிய மெய் என்க...

க் + அ = க.
அ + க் = அக்

வியன்மை

உலகெங்கும் பரவியுள்ள தன்மை

பல தமிழ்ச் சொற்கள் உலகெங்கும் உள்ள மொழிகளுக்குப் பரவியுள்ளன.
 எ.டு. அம்மா, அம்மை, அப்பன்.
கருத்தளவிலும், பற்பல தமிழ் இலக்கிய இலக்கண மெய்யியல் கருத்துகள் உலகெங்கும் பரவியுள்ளன. அகர முதல வெழுத்தெல்லாம் என்றது அனைத்து மொழிகளுக்குமாம்.இதுவரை, மொழிஞாயிறு பாவாணர் தொகுத்தளித்த, தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகளின் விளக்கங்கள் கண்டோம்.

இவற்றைத் தவிரவும் தமிழுக்கு ஒரு தனிப்பெருஞ் சிறப்பு உண்டு.
அது..
'தமிழ் நம் தாய்மொழி' என்பதாகும்.

எழுத்திலக்கண உறுப்புகள்

எழுத்திலக்கணத்து உறுப்புகளாவன பன்னிரண்டாம். அவை
  1. எண் (எழுத்துகளின் தொகை)
  2. பெயர் (வகை)
  3. முறை (வைப்பு முறை)
  4. பிறப்பு (எழுத்துகள் பிறக்கும் முறை)
  5. உருவம் (எழுத்துகளின் உருவம்)
  6. மாத்திரை (எழுத்துகளின் அளபு)
  7. முதனிலை (சொல்லின் முதலில் நிற்கும் எழுத்துகள்)
  8. ஈறுநிலை (சொல்லின் இறுதியில் நிற்கும் எழுத்துகள்)
  9. இடைநிலை (இந்த இந்த எழுத்தின் பின் இந்த இந்த எழுத்துகள் சொற்களின் இடையில் வருதல் பற்றியது)
  10. போலி (ஐ - அய்...)
  11. சொல்லுருவாக்கம் (எழுத்துகள் சொற்களாக உருவாகும் முறை)
  12. புணர்ச்சி (இரு எழுத்துகள் சேரும் போதான நிலை)
அனைத்து  உறுப்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இயன்மை

இயல்பான தன்மை

தமிழர்களால் தம் வாழ்வோடு இணைந்து தம் வாழ்வுக்காகப் படிப்படியாக உருவாக்கிய மொழி... செயற்கையாக உருவாக்கப்படாமல் இயல்பாக உருவான மொழி. தேவமொழி என்பன போன்ற இயல்மற்ற தன்மை அல்லாமல், இது பல்லாயிரத் தலைமுறைத் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையினால் உருவானது என்க. (சிவன் தமிழ்க்கழகத்தில் அமர்ந்து தமிழை ஆய்ந்தார் என்றே பாடல்கள் உள்ளன.)

மேலும் செயற்கையாக உருவாகாத மொழி என்பதால் பெரும்பாலான சொற்களுக்குத் தமிழிலேயே வேர்ச்சொல் இருப்பதும், மொழியியல், அதாவது, ஒரு மொழி எப்படித் தோன்றுகிறது, என்ற அறிவியலுக்கு ஆராய்ச்சிக்குத், தமிழே துணை நிற்கும், என்று அறிஞர்கள் கூறுவர்.

தமிழ வல்லினங்கள், உண்மையில் மற்ற மொழி வல்லொலிகளோடு ஒப்பிடின் மெல்லினங்களே ஆயினும், அந்தச் சிறு வலிமையையும் எளிமைப்படுத்த மக்கள் வாய்பாடிய குற்றுகரங்களை யேற்றுப் பொலிந்து இலக்கணங் கண்ட மொழி தமிழொன்றே என்க. இதனைப் பின்னர் விரிப்போம்.

திருமை

'திரு' என்னும் அடை பொருந்தும் தன்மை, தெய்வமாகிய தன்மை.
இன்றைய அளவில், தமிழரைக் காப்பாற்ற, தமிழை விட வேறு தெய்வம் இல்லை என்க.
திருமைக்கு அழகு என்றும் பொருள்.

நுண்மை

தமிழின் நுண்மைக்கு, உயிரும் மெய்யும் என்று எழுத்துகளை வகைப்படுத்தியது தொடங்கி கணக்கிலா சான்றுகள் காட்டலாம். அவற்றில் ஒன்று இதோ.

தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டியலின் சுருக்கம்:
நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு' என்ப.
என்று மெய்ப்பாடுகள் (மெய் படும் பாடுகள்) எட்டே என்று குறித்ததோடு...

அவற்றுள்,
எள்ளல், இளமை, பேதைமை, மடன், என்று
உள்ளப்பட்ட நகை நான்கு என்ப

என்று நான்கு வழி வருவதே நகை என்றும்.

அழுகை என்பதோ,
இளிவே, இழவே, அசைவே, வறுமை, என
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே.


இளிவரல் என்னும் இழிவுறுதல். இகழ்வுறுதல் என்பதோ,
மூப்பே, பிணியே, வருத்தம், மென்மையொடு,
யாப்புற வந்த இளிவரல் நான்கே.


மருட்கை எனப்படும் வியப்புறுதல் என்பதோ,
புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு,
மதிமை சாலா மருட்கை நான்கே.




அச்சம் என்பதோ,
அணங்கே, விலங்கே, கள்வர், தம் இறை, எனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே.


பெருமிதம் என்பதோ,
கல்வி, தறுகண், புகழ்மை, கொடை, எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.


வெகுளி எனப்படும் சினத்தல் என்பதோ,
உறுப்பறை, குடிகோள், அலை, கொலை, என்ற
வெறுப்பின் வந்த வெகுளி நான்கே.

 
உவகை என்பதோ,
செல்வம், புலனே, புணர்வு, விளையாட்டு, என்று
அல்லல் நீத்த உவகை நான்கே.

இவ்வாறான நுட்பமான உளவியல் வரையறைகளை, தன் முதுபழம் நூலான தொல்காப்பியத்துள் வைத்துக் காட்டுவதே, நம் தமிழின் நுண்மைக்குச் சான்றாம்.

கீழே குறிப்பிட்டுள்ள பாட்டில் ஐம்பால் என்பதும் அதற்கான விளக்கமுமே தமிழின் நுண்மைக்குச் சான்றாம்.

புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார்
வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும்
அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல்
பூங்குலை யீன்ற புறவு.

(ப-ரை.)புணர்தரு - (இம்மை மறுமையின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டு வர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர்,  வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய் - கூந்தலையுடையாய், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் - கூறாநிற்கின்றன, அணர்த்துஎழு - மேனோக்கியெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர்கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூக்கொத்துக்களை யீன்ற, புறவு - காடுகள்,

தருபாக்கு : வினையெச்சம் வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும் பீலி' என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்' என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க.

தனிமை

தனித்து இயங்கும் தன்மை

இது வேறெம்மொழிக்கும் இல்லாத தமிழின் தனிப்பெருஞ் சொத்தாகும்.

தமிழ் மொழியானது வேறு எந்த மொழியின் சொற்களைப் பயன்கொள்ளாமல் தனித்து இயங்கும் தன்மை கொண்ட ஒரே மொழியாகும்.

‘மற்ற மொழிகளில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர, அதன் வளம் பெருகும். தமிழில் வேற்று மொழிச் சொற்கள் சேரச் சேர அதன் வளம் குன்றும்.’

பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தான் தமிழ் வளரும் என்பது உண்மைக்கு மாறானது. கற்களைக் கலந்தால்தான் அரிசி வளரும் என்பதைப் போன்றது.

தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப்பகைவர்கள் சிலர், ‘தனித்தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன் எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.

புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியிலும் இல்லை. ஒரு மொழி புரியவில்லை என்றால், அவன் அந்த மொழியைப் படிக்கவில்லை என்பது பொருள். தமிழ் தெரியவில்லை, புரியவில்லை என்றால் தமிழைப் படி. அதைவிட்டு நீயும் தமிழைப் படிக்காமல், தமிழ் அறியாதவனுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என்றால் அது எப்படி தக்கதாகும்? அப்படி எழுதினாலும் அது ஒரு புதுமொழியாக இருக்குமே யன்றி எப்படித் தமிழ் மொழியாக விருக்கும்?

அட்காக் கமிட்டி, லோக் சபா, ஜனாதிபதி, மஜ்தூர், ஆகாசவாணி எல்லாம் புரியும்போது, தமிழனுக்குத் தமிழ் புரியாது எனக் கூறுவது வெட்கக் கேடானது. வடமொழிச் சொற்களையும் நன்கு பலுக்கும் தமிழனுக்குத் ‘தமிழ் பலுக்க வராது‘ எனக் கூறுவது மானக்கேடாகும்."

தமிழின் சிறப்பு என்ற நூலில் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறியது.

இனிமை


பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே.

திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே!!

சிலம்பின் இக்கானல்வரிகளே தமிழினினிமைக்குப் போதிய சான்றாம்.

மும்மை

இயல், இசை, நாடகம் என இயங்கும் முத்தன்மை

இயல், இசை, நாடகம் என்றே, தொன்று தொட்டு முதலே இயங்கி வருதலோடு, அம்மூன்றுக்கும் தனியிலக்கணங்கள் கொண்டிருந்த மொழி தமிழ் என்பதனாலேயே, முத்தமிழ் என்ற அடை, தமிழுக்குச் சிறப்பாகப் பொருந்துகிறது எனலாம்.

செம்மை

செழுமை

தமிழ் மொழி, செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரு நிலைகளாக உள்ளது. மக்களுக்கு ஒழுக்க வரம்பு எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பு ஆகும். சொற்களின் திருந்திய வடிவையும் ஒழுங்கையும், தமிழில் நாம் தெளிவாக காண முடியும்.
'என்ன செய்யுற' என்று பேசினாலும், 'என்ன செய்கிறாய்' என்றே எழுதப்படுவது நம் நடைமுறை.
இவ்வாறு இரு நிலைகளாக வேறு மொழிகளில் நடைமுறை இல்லை என்பது தமிழின் செம்மைக்குச் போதிய சான்றாம்.

தமிழில் புதுப்பெருக்கு நீரைக் குறிக்கும் வெள்ளம் என்னும் செந்தமிழ்ச் சொல், மலையாளத்தில் நீர்ப் பொதுவைக் குறிப்பதும், விடை சொல்லுதலைக் குறிக்கும் செப்புதல் என்னும் செந்தமிழ்ச் சொல், தெலுங்கிற் பொதுவாகச் சொல்லுதலைக் குறித்தலும், ஒன்றைச் செய்ய திறமையோடிருத்தலைக் குறிக்கும் மாட்டுதல் என்னும் செந்தமிழ்ச் சொல் கன்னடத்தில் மாடுதல் என்னும் வடிவில் பொதுவாகச் செய்தலைக் குறிக்கின்றமையும் கொடுந்தமிழ் நிலையாம். கூர்ந்து பார்த்தலைக் குறிக்கும் நோக்குதல் என்னும் சொல், மலையாளத்திற் பொதுவாகப் பார்த்தலைக் குறித்தலும் அஃதே.

செந்தமிழ் எழுத்துகள் கொடுந்தமிழிற் பலவாறு திரியுமேனும், வலி மெலித்தல் மலையாளத்திற்கும், ரகரம் தொகல் (மறைதல்) தெலுங்கிற்கும், பகரம் மூச்சொலியாதல் கன்னடத்திற்கும் சிறப்பாகும்

எடுத்துக்காட்டு:
மலையாளம் : கஞ்சி - கஞ்ஞி, நீங்கள் - நிங்ங்ள், வந்து - வந்நு.
தெலுங்கு     : பருப்பு - பப்பு, மருந்து - மந்து
கன்னடம்     : பள்ளி - ஹள்ளி, பாளை -ஹாளெ, பொன்- ஹொன்னு

வடசொற்கள் பின்வருமாறு பலவகையில் திரியும்:
ஆயிரம் -ஸகஸ்ர
கலுழன் - கருட(g)
கோட்டம் - கோஷ்ட
சாயை - சாயா (ch)
தூண்டம் - ஸ்தூணா,
மயில் - மயூர
முகம் - முக(kh)
வட்டம் - வ்ருத்த

இனனும் விரிவுக்குப், பாவாணரின் ‘செந்தமிழ்ச் சிறப்பு’ என்ற நூலைக் காண்க.

தூய்மை

பிற மொழிகளில் இருந்து சொற்களை கடன் வாங்கியதால்தான் ஆங்கிலம் வளர்ந்தது. அதே போல் தமிழையும், சொற்களை கடன் வாங்கிக் கொண்டு வளர்ப்பதில், என்ன குற்றம் என்று கேட்போர் உளர்.

ஆங்கிலத்தின் சொல்வளம் பற்றி அறிய, அம்மொழியில், காயைப், 'பழுக்காத பழம்' என்று குறிப்பது ஒன்றே போதும். ஆனால் தமிழில் சொல் வளக் குறை உள்ளதா?

சாளரம், பலகணி, காலதர் என்னும் மூன்று சொற்கள் இருந்த போதிலும் போர்த்துகீசியச் சொல்லான சன்னல் என்பதை தேவையில்லாது தமிழர்கள் வழங்கி வந்ததால், அம்மூன்று தமிழ்ச்சொற்களும் வழக்கொழிந்து போயிற்று.

தமிழர்க்குள்ள பெருமை எல்லாம் அவர் தொன்றுதொட்டுத் தூயதாக வழங்கி வரும் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது என்பார் மறைமலையடிகள்.

மிளகை மட்டும் அறிந்த அக்காலத் தமிழர்கள், மிளகாய் இங்கு வந்தவுடனே, மிளகைப் போன்ற காய் என்று பொருள்படும்படி, மிளகாய் என்ற தனித்தமிழ் பெயர் வைத்து வழங்கியதைக் கண்டுகொள்வோம்.

செந்தமிழ், கொடுந்தமிழ் (கொடுமை என்றால் வளைந்த தன்மை. பேச்சு நடைத் தமிழ்) என்று இன்றளவிலும், இரு நிலைகளிலும் வாழும், ஒரே மொழி, தமிழே.

எழுதப்படிக்கத் தெரியாதவர் கூட, மேடையேறிப் பேசும்போது செந்தமிழில் பேசுவது என்பது, தமிழர்கள் இயல்பாகவே செய்து வரும் நடவடிக்கை என்பதை உணர்த்தும்.

எத்தனையோ நூற்றாண்டுகளாக, தமிழ் மொழி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு, மணிப்பிரவாளம் என்ற கலப்பு நடை வளர்க்கப்பட்டு வந்த போதும், வடமொழி மட்டுமல்லாது, 27 மொழிகள் தமிழைத் தாக்கியபோதும், மீண்டும் மீண்டும், மீண்டு எழும் தமிழின் தூய்மை, அதன் இயல்பான பண்பாகும் என்றாலும் நம் கடமையையும் உணர்ந்து தமிழின் தூய்மையைப் பேணுவோம்.

"என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே"

என்றார் திருமூலர் வாய்மொழியைப் பேணுவோம்.

புதிர்: ஔவையாரின் ஆத்திசூடி சிதறிக் கிடக்கின்றது


ஔவையாரின் ஆத்திசூடி சிதறிக் கிடக்கின்றது.சரி செய்து, கண்டுப் பிடித்தவைகளுக்கு பொருளும் குறிப்பிடணும்.

திகழ்ச்சி, சினம், தொழியேல், கைவிடேல், ஓதுவ, பேசேல், எண்ணெழுத், இயல்வது, ஔவியம், ஊக்கமது, ஏற்ப, ஆறுவது, திகழேல், கரவேல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
===============================================

விடை:

ஆறுவதுசினம், 
இயல்வது கரவேல்,
ஊக்கமதுகைவிடேல்
எண்ணெழுத்திகழேல்
ஏற்பதிகழ்ச்சி
ஓதுவதொழியேல்
ஔவியம்பேசேல்
 
===============================================

விளக்கம்

ஆறுவது சினம்.
சொற்பொருள்: ஆறுவது- அடங்க வெண்டியது; சினம்- கோபம்.
கருத்து        : நாம் அடக்க வேண்டியது சினமே ஆடும்.

இயல்வது கரவேல்
சொற்பொருள் : இயல்வது- உன்னால் செய்ய முடிவதை; கரவேல்- செய்யாமல் மறைத்து வைக்காதே.
கருத்து         : நம்மால் முடிந்ததை மறைக்காமல் செய்ய வேண்டும்
 
ஊக்கமது கைவிடேல் சொற்பொருள்
சொற்பொருள் : ஊக்க்கம் அதை- உற்சாகத்தை; கைவிடேல்- இழந்து விடாதே
கருத்து         :ஒரு செயலைச் செய்யும் போது தடை ஏற்படுமாயினும், அது கண்டு உற்சாகம் குன்றிவிடக் கூடாது.

எண் எழுத்து இகழேல்
சொற்பொருள் : எண்-விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அடிப்படையான எண்ணையும்; எழுத்து - இலக்கிய வளர்ச்சிக்கு அடிப்படையான எழுத்தையும்; இகழேல்- அலட்சியம் செய்யாதே.

ஏற்பது இகழ்ச்சி
சொற்பொருள்: ஏற்பது-ஒருவரிடம் சென்று இரப்பது(இல்லை எனக் கேட்பது); இகழ்ச்சி- இழிவைத் தருவது)
கருத்து        : யாசிப்பது இழிவு தரும் செயலாகும்
 
ஓதுவது ஒழியேல்
சொற்பொருள் : ஓதுவது- கறபது; ஒழியேல்-விட்டு விடாதே.
கருத்து         : எக்காரணமாயினும் படிப்பதை விடலாகாது.

ஔவியம் பேசேல்
சொற்பொருள் : ஔவியம்-பொறாமை; பேசேல்- பேசாதே
கருத்து         : பொறமை கொண்டு பேசுவது கூடாது.

தாய்மை

பல மொழிகளை ஈன்றெடுத்த தாய்மை

இன்றைய அரசியல் நிலை காரணமாக தமிழின் தாய்மைப் பண்பு மறைக்கப்பட்டு, திராவிட மொழிக்குடும்பம் எனும் ஏமாற்றுச் சிறையில் கிடந்தாலும், தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும் தமிழின் திரிபே என்பதும், தமிழே திராவிட மொழிகள் என்று சொல்லப்படும் மொழிக்குடும்பத்தின் தாய் மற்றும் மூலம் என்பதுவும் மறுக்கவியலாத உண்மையாகும்.

பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் தமிழ்ச் சொற்கள், ஆரியம் என்னும் வட மொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

வீடு என்ற சொல்லை மட்டுமன்றி , இல் என்னும் தெலுங்குச் சொல்லையும், மனை என்னும் கன்னடச் சொல்லையும், சமற்கிருதத்திற்கும் பின்னிய (பின்னிஸ்) மொழிகட்கும் பொதுவான குடி என்னும் சொல்லையும் தன்னகத்தே தமிழ் கொண்டுள்ளது.

சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச்சொல்லே என்பது இன்று ஆராய்ச்சியால் நிருவப்பட்டுள்ளது என்பார் பாவாணர். தமிழர் மதம் எனும் பாவாணரின் நூலில், உலகின் ஏனைய மொழிகளின் தாய்மொழி என போற்றப்படும் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழி சொற்களும் பல தமிழில் இருந்தே பிறந்தனவென்று பதிவிடுகிறார்!
எ. கா. Navy - நேவி - நாவுதல்

இவை தமிழின் தாய்மைக்குத் தக்க சான்றுகளாம்.

வளமை

சொல், பொருள், இலக்கண, மொழி, இலக்கிய வளமை

இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்,
அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்து நிலைப் பூப் பெயர்களும்,
கச்சல் (வாழை), வடு (மா), குரும்பை (தென்னை பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும் தமிழின் சொல்வளத்தைக் காட்டும்.


தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.

யானையின் தமிழ்ப்பெயர்கள் தொகு
  1. யானை/ஏனை (கரியது)
  2. வேழம் (வெள்ளை யானை)
  3. களிறு
  4. களபம்
  5. மாதங்கம்
  6. கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
  7. உம்பர்
  8. உம்பல் (உயர்ந்தது)
  9. அஞ்சனாவதி
  10. அரசுவா
  11. அல்லியன்
  12. அறுபடை
  13. ஆம்பல்
  14. ஆனை
  15. இபம்
  16. இரதி
  17. குஞ்சரம்
  18. இருள்
  19. தும்பு
  20. வல்விலங்கு
  21. தூங்கல்
  22. தோல்
  23. கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
  24. எறும்பி
  25. பெருமா (பெரிய விலங்கு)
  26. வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
  27. புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
  28. ஒருத்தல்
  29. ஓங்கல் (மலைபோன்றது)
  30. நாக
  31. பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
  32. கும்பி
  33. தும்பி (துளையுள்ள கையை உடையது)
  34. நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
  35. குஞ்சரம் (திரண்டது)
  36. கரேணு
  37. உவா (திரண்டது)
  38. கரி (கரியது)
  39. கள்வன் (கரியது)
  40. கயம்
  41. சிந்துரம்
  42. வயமா
  43. புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
  44. தந்தி
  45. மதாவளம்
  46. தந்தாவளம்
  47. கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
  48. வழுவை (உருண்டு திரண்டது)
  49. மந்தமா
  50. மருண்மா
  51. மதகயம்
  52. போதகம்
  53. யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
  54. மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
  55. கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

கன்று, பிள்ளை, குட்டி, குஞ்சு, சேய், குழந்தை, எனப்பலவாறு அழைப்பது மொழியின் வளம் மட்டுமல்லாது தொன்மையையும் காட்டும்.

இலக்கிய இலக்கண வளமை ஊரறிந்ததே. யாப்பு வளம், இசை வளம், பொருள் வளம் என எத்துணையோ அத்துணையும் கொண்டது நம் தமிழேயென்க. அன்பின் வழியது உயிர்நிலை என்பதே நம் ஆழ்ந்த கருத்து வளத்தைக் காட்டப் போதுமானதாகும்.

இளமை

எழில் கொஞ்சும் இளமை.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

என்று பாடினார், பேராசிரியர் பெரும்புலவர் மனோன்மணியம் கண்ட பெ.சுந்தரனார்..

மேற்கண்ட பாடலின் பொருள்:
தமிழ்மொழியானது, தன் வயிற்றில் இருந்து பல மொழிகளை பெற்றெடுத்த தாயாய் இருந்தும், ஆரியம் எனப்படும் சமற்கிருதம் போல் பேச்சு வழக்கின்றி அழிந்து சிதைந்து போகாது, இன்றும் வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல், தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது எப்படியுள்ளது என்றால், பல உயிர்களைப் பல உலகங்களைப் படைத்தும் அழித்தும் செய்த செய்கின்ற எல்லாம் வல்ல இறைவன் தன் இளமை குன்றாது வாழ்ந்து வருவது போலவுள்ளதன்றோ.. அத்தகைய தமிழின் சீரிய இளமையின் திறத்தை வியந்து செயல்மறந்து வாழ்த்துவோமே.....(பிள்ளை பெற்றவுடன், தாய் முதுமையுறுதல் போல அல்லாமல், முன் இருந்தபடியே இளமையாய் இருக்கும் தமிழின் இளமையைப் போற்றுவது என்றவாறு

ஒண்மை

ஒளிமை என்பது அறிவொளியாய் இருந்து மக்களை வழிநடத்தும் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மாண்பினைக் குறிக்கும்.

மனித வாழ்வின் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து, அதனை நல்வழிப்படுத்துவதற்கு, ஒழுங்குபடுத்துவதற்கு இயற்றப்பட்ட திருக்குறளை விட, இதற்கு எடுத்துக்காட்டுத் தேவையில்லை.

பேச்சினால் வரும் குற்றங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை மொத்தம் நான்கு குற்றங்கள் என்று தொகுத்தார் வள்ளுவர்.
அவையாவன

  1. பொய் பேசுதல்,
  2. புறம் பேசுதல் (அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். இது கோள் சொல்லுதல், குண்டுணி பேசுதல் என்று இருவகைப்படுமாம், குறளை என்றும் இதனைச் சொல்வர்),
  3. தீயசொற்களைப் பேசுதல்
  4. தேவையற்றதைப் பேசுதல்
என்று வகுத்தும் தொகுத்தும் அவற்றை வாய்மை, புறங்கூறாமை, இனியவை கூறல், பயனில சொல்லாமை ஆகிய அதிகாரங்களால் விளக்குகிறார்.

இதில் பொய் என்பதைக் கடியும், வாய்மை எனும் அதிகாரத்தை என்பதை மட்டும் துறவறவியலில் வைத்து. மற்ற மூன்றையும் இல்லறவியலில் வைக்கிறார்.

பொதுவாக , இல்லற வாழ்க்கையில், சொந்தங்களோடு கூடி வாழ்கையில் வரும் சண்டைகளில், பெரும்பான்மைச் சண்டைகள், இந்த மூன்று வகைப் பேச்சுக்களால் தான் என்பதை நாம் எளிதில் உணரலாம். இத்தகைய, வாழ்வில் ஒளி சேர்க்கும் இலக்கியங்களும் இருப்பதனால் தான், தமிழுக்கு ஒண்மை என்ற பண்பு உள்ளது என்று கூறுகிறோம்.

ஞாலத்து இருளகற்றும் தன்னேரிலாத தமிழ் என்று.

எண்மை (எளிமை)

எண்மை (எளிமை);

ஒலிப்பதில், பேசுவதில், கையாள்வதில், எழுதுவதில், கற்பதில் எளிமை என்பது எண்மை. இது மென்மையும் ஆகும்.

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்.

தமிழ்ச் சொற்களில், சில மெய் எழுத்துகளுக்குப் பின், வேறு எந்த மெய் எழுத்துகள் வருவது இல்லை. அதே போல சொல்லின் இறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகியன வருவதே இல்லை. (ஏக், பான்ச், பாத், ஆப் போன்ற இந்திச் சொற்களையும்; கேக், வாட்ச், டாட், வித், ச்னாப் போன்ற ஆங்கிலச் சொற்களையும் ஓலித்துப் பார்க்க. அவை மிகுந்த அழுத்தத்தோடு முடிவடைவதுடன், அடிவயிற்றை இழுத்துப் பிடித்துச் சொல்ல வேண்டியுள்ளதனை, மூச்சு முட்டுவதனை ஒப்பு நோக்குக)

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி என்பதனை, எள்ளி நகைக்க வேண்டிய தேவை, தமிழ்ப் பகைவர்க்கு வேண்டுமானால் இருக்கலாம். மேற்கண்ட எளிய உண்மை அறிந்தால் நம் தமிழின் எளிமையும் மென்மையும் விளங்கும்.

மூத்த குடியாதலால் தமிழரின் வாயில் இவை போன்ற கடுமையான ஒலிகொண்ட சொற்கள், இயற்கையாகவே வரவில்லை. அவர் வாயில் எளிய முறையில் ஒலிக்கக் கூடிய தனியொலிகளும் கூட்டொலிகளுமே பிறந்தன.

எனவேதான் சாக்ட்சி என்ற வடசொல்லை சாக்கி என்றும், ஜாதி என்பதனை சாதி என்றும் தென்தமிழ்நாட்டு நெல்லை மாவட்டத் தமிழர்கள் ஒலிப்பதைச் சுட்டிக் காட்டுவார் பாவாணர்.

இவ்வாறு எளிய ஒலிகளைக் கொண்டிருந்தும், தமிழின் ஓசை இனிமைக்கு எந்த குறைவும் வந்துவிடவில்லை என்பார் பாவாணர்.

தண்டலை மயில்க ளாடத்
தாமரை விளக்கந் தாங்க,
கொண்டல்கள் முழவி னோங்கக்
குவளைகண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுக ளினிது பாட
மருதம்வீற் றிருக்கு மாதோ
                      - கம்பர்

என்னும் கம்பரின் செய்யுளைப் பாடிப் பார்த்து, தமிழின் ஓசை இனிமையை உணர்ந்துகொள்ளச் சொல்வார் பாவாணர். ஒரு மொழிக்கு வேண்டியவை சொற்களேயன்றித் தனியெழுத்துக்களல்ல. வெறும்முப்பது ஒலிகளைக் கொண்டே குமரிக்கண்டக் காலத்திலும், இன்றைய காலத்திலும், இனி வரும் காலத்திலும் தமிழன் தன் மனத்தில் தோன்றக்கூடிய எல்லா கருத்துக்களையும் குறிக்கத்தக்க வேர்சொற்களை அன்றே பிறப்பித்து வைத்திருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு பிற மொழியின் வல்லொலிகள் தேவையில்லை என்பார் என்க.

முன்மை

முன்மை என்றால் முதன்மையாக நிற்குந் தன்மை என்க.

செவ்வியல் மொழிகளாக உலகளவில் கருதப்படும் மொழிகள் மொத்தம் ஏழு. அவற்றுள் இன்றைக்கு பாட்டிலும் ஏட்டிலும் நாவிலும் சிறப்பாக வாழும் மொழி நம் தமிழே. தமிழ் ஒன்றே.

அது மட்டுமின்றிப், பல செவ்வியல் மொழிகளின் சொற்களின் மூலங்களைத் தமிழில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் மொழியியலாளர்கள்.

இலக்கணங்களில் இலக்கியங்களில் முந்தியிருப்பவை தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களுமே.
ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
        - (தொல்காப்பியம் மரபியல்)

மேலுள்ள பாடல், கூர்தலற (பரிணாம) வளர்ச்சி பற்றிய அறிவியலைக் காட்டும் தொல்காப்பியப் பாடல் ஆகும்.

தமிழின் முன்மை இதனால் இனிது விளங்கும்.

சிலப்பதிகாரம் - முனைவர் மு.இளங்கோவன் அவர்களது ஆய்வுக் கட்டுரை

சிலப்பதிகாரம் தமிழரின் இசையறிவுக் கருவூலம்

தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றியுள்ளன எனினும் மற்ற நூல்களுக்கு இல்லாத சிறப்புக்கூறுகள் பல சிலப்பதிகாரத்திற்கு உண்டு.இந்நூலை முத்தமிழ்க்காப்பியம்,குடிமக்கள் காப்பியம் என இதன் பொருண்மையுணர்ந்து பெயரிட்டு அழைப்பது உண்டு.இதன் காவியச்சுவையில் மயங்கி நெஞ்சையள்ளும் சிலம்பு எனப்பாராட்டுவதும் உண்டு.இவ்வாறு பலவகையில் சிலம்பைச்சுவைத்து மகிழ்ந்து பாராட்டினாலும் சிலப்பதிகாரக்கடல் முழுவதையும் நீந்திக்கரைகண்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று கூறும் அளவில்தான் உள்ளது.இசைமேதை வீ.ப.க.சுந்தரம் அவர்கள் பத்தாண்டுகள் சிலப்பதிகாரத்தைத் தொடர்ச்சியாகக் கற்ற பிறகே சிறிதளவு விளங்கிற்று எனவும்,அறுபது ஆண்டுகள் கற்ற பிறகும் இன்னும் பல இடங்கள் விளங்கவில்லை எனவும் கூறியகூற்றுகள்(கட்டுரையாளர் இசைமேதை அவர்களின் உதவியாளர்) சிலப்பதிகாரத்தின் ஆழ அகலங்களைக்குறிப்பிடும் சான்றுகளாகும். சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். அதன்படி இன்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டநூலாகக் கருதலாம்.அக்காலத்தில் தமிழ்மொழியில்,தமிழ்இசையில்,தமிழ்நாடகத்தில்,தமிழ்ப்பண்பாட்டில் அயலவரின் ஆதிக்கம் மிகுதியாக இல்லை.எங்கும்தூய தமிழ்ச்சொல்வழக்குகளே புலவர்களால் ஆளப்பட்டுள்ளது(ஓரிரு அயற்சொற்கள் கலந்துள்ளமையை நெறிவிலக்காகக் கொள்க) அத்தூய தமிழ்ச்சொல்வழக்குகள் கொண்டு அமைந்த,ஒப்புமை சொல்ல முடியாத உயர்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இசையுண்மைகளைக் குறிப்பிடும் சொற்கள் பலவற்றிற்கு இற்றை அறிஞர்களால் தெளிவான பொருள்காணமுடியாதபடி இசைத்துறை நமக்குத்தொடர்பில்லாத துறையாக ஆகிவிட்டது.இசைத்துறை வல்லார் தமிழறிவு இல்லாமலும் தமிழறிவு உடையார் இசையறிவு இல்லாமலும் ஆனமை சிலப்பதிகாரம் போன்ற நூலின் முழுத்தன்மையும் உணரமுடியாமல் போனமைக்குக்காரணங்களாகும்(இவ்விரு துறையில் வல்ல அறிஞர்கள் சிலர் வரைந்த விளக்கங்கள்-வெளிப்படுத்திய ஆய்வுகள் எளிமைப்படுத்தப்படாமல் புதிய குழப்பம்தரும் விளக்கங்களாகவே உள்ளன). சிலப்பதிகாரத்தில் இசை முதன்மை
சிலப்பதிகாரம் தமிழர்களை ஒன்றிணைக்க எழுந்த காப்பியம் என்று கதையமைப்பு,காண்டங்களின் பகுப்பு முதலியவற்றைக்கொண்டு அறிஞர்கள் குறிப்பிடுவர்.இக்கருத்து உண்மை என்பதற்கு வலிவான சான்றுகள் உள்ளன.எனினும் இந்நூல் இளங்கோவடிகளின் இசை,கூத்து அறிவினை வெளிப்படுத்திக்காட்டவும்,தமிழர்களின் இசை,கூத்து மரபுகளின் அறிவுச்செழுமையை நிலைநாட்டவும் எழுதப்பட்டது. ஏனெனில் கோவலன் கண்ணகி கதையை மட்டும் கூறுவது அடிகளாரின் நோக்கம் என்றால் பல்வேறு இடங்களில் இசை,கூத்து பற்றிய செய்திகளை மேலோட்டமாகச்சொல்லியிருக்கலாம்.அவ்வாறு இல்லாமல் இசைக்கருவிகள் பற்றியும்,இசைக்கலைஞர்களைப் பற்றியும்,இசைக்கருவிகளை இயக்கும்முறை பற்றியும்,இயக்கும்பொழுது ஏற்படும் நிறை,குறை பற்றியும் பதியவைத்துப் பொறுப்புள்ள சமூகக்கலைஞராக அடிகளார் விளங்குகிறார்.காப்பியவோட்டத்தில் இசையிலக்கணச் செய்திகளைப் பதிவுசெய்த ஓர் இலக்கிய ஆசிரியனை உலக இலக்கியங்களில் காண இயலவில்லை.முல்லை,குறிஞ்சி,மருதம்,நெய்தல்,பாலை எனும் ஐந்து நிலங்களில் வாழும் மக்கள் அவரவரும் தத்தம் நிலம்சார்ந்த இசைக்கருவிகளையும்,பண்ணையும்பயன்படுத்தினர்.சிற்றூர் மக்கள் தங்கள் நாட்டுப்புற இசைவடிவங்களைப் பயன்படுத்தினர்.இவற்றையெல்லாம் திட்டமிட்டவாறு அடிகளார் உரிய இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
இளங்கோவடிகள் குறிப்பிடும் இசைக்கருவிகள்,இசைக்கருவிகளை வரிசைப்படுத்தி இயக்கியமுறைகள்,இசைகுறித்த சொற்கள் யாவும் தமிழ்நெறி சார்ந்தன.ஆனால் அண்மை நூற்றாண்டுகளில் இசை,நாட்டியத்துறைகளில் புகுந்த அயலவர்களின் செல்வாக்கால் நம் தமிழ்ப்பண்கள்,அடவுமுறைகள் முதலியவற்றிலெல்லாம் பயன்படுத்தப்பட்ட தமிழ்ச்சொற்களை அழித்து,அதற்கு வடமொழிப்பெயர்களை இட்டு வழங்கியதால் இப்பொழுது உண்மையை இனங்காண முடியாதபடி சூழல் உள்ளது.இத்தெளிவின்மையை மாற்றிப் புத்தொளி பாய்ச்சி சிலம்பை விளங்கவைக்க முயன்றவர்களுள் ஆபிரகாம்பண்டுவர்,விபுலானந்தர்,இராமநாதனார்,குடந்தை ப.சுந்தரேசனார், சிலம்புச்செல்வர்,வீ.ப.கா.சுந்தரனார்,ச.வே.சு,இரா.திருமுருகனார் முதலானவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
காரைக்காலம்மையார்.ஞானசம்பந்தர்,நாவுக்கரசர்,சுந்தரர்,சேக்கிழார்,அருணகிரியார்,திரிகூடராசப்ப கவிராயர்,மாரிமுத்தாபிள்ளை,கோபாலகிருட்டிணபாரதியார் வரை வளர்ந்து வந்த தமிழிசைமரபுஇன்று இடையீடுபட்டுள்ளதையும் தெலுங்கிசை அந்த இடத்தில் பரப்பப்படுவதையும் யாவரும் அறிவோம்.அதுபோல்கோயில்களில் நாட்டியமாடத் தேவரடியார்களாக இருந்து நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்த தமிழகத்துப்பெண்களிடத்திருந்து,நாட்டியத்தைக் கைப்பற்றிக்கொண்டவர்கள் பரதமுனிவர்தான்(கி.பி.நான்காம் நூற்றாண்டு)வடமொழியில் நாட்டியத்தை முதன்
முதல் இலக்கணமாக எழுதியுள்ளார் என்று ஆங்கில நூல்கள் வழி உலகிற்குப்பொய்யுரை புகலும் கூட்டத்தினர் தமிழகத்தில்பரவலாக உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிலம்பின் இசைநுணுக்கம் உணரத்துணைபுரிபவர்கள்
சிலப்பதிகாரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுந்த நூல் என்பதால் அதனை உரையாசிரியர்களின்,இசையாய்வுஅறிஞர்களின் துணைகொண்டே முழுமையாக உணரமுடியும்.அவ்வகையில்அரும்பதவுரைகாரர்(11-ஆம்நூற்றாண்டு)அடியார்க்குநல்லாரின்உரைக்குறிப்புகள்(11ஆம் நூற்றாண்டு),ஆபிரகாம்பண்டிதரின் விளக்கங்கள்,குடந்தை ப.சுந்தரேசனார்,வீ.ப.கா.சுந்தரனார்,இராமநாதனார் முதலானவர்களின் விளக்கங்களின் துணைகொண்டே சிலப்பதிகார இசைநுட்பங்களை உணரமுடியும்.இவற்றுள் அரும்பதவுரை என்பது சில இடங்களில் அரிய உண்மைகளை எடுத்துரைக்கிறது. அரும்பதவுரையைத் தழுவியதாகவே பல இடங்களில் அடியார்க்குநல்லார் உரை உள்ளது.அடியார்க்குநல்லார் உரை கிடைக்காத சில இடங்கள் அரும்பதவுரையின் துணைகொண்டே உணரமுடிகின்றது. அரும்பதவுரைகாரர் மேற்கோள்வரிகளைத்தொடக்கம் முடிவு மட்டுமே தருவார்.பஞ்சமரபு முதலான பழந்தமிழ்இசை இலக்கண நூல்களைக்கற்றவராக அரும்பதவுரைகாரர் விளங்குவதை வீ.ப.கா.சுந்தரம் எடுத்துரைப்பார்.அரும்பதவுரைகாரர் உரையைக்குறிப்புகளாக வரைந்துள்ளார்.இவர்காலத்தில் பல இசையிலக்கண நூல்கள் இருந்துள்ளமையை இவர்தம் உரையை ஆழ்ந்து கற்கும்பொழுது உணரமுடிகிறது. சிலப்பதிகாரம் இசைபற்றிய பல உண்மைகளை எடுத்துரைப்பது போல அதற்கு உரையெழுதிய அரும்பதவுரைகாரர்,அடியார்க்குநல்லார்,நூல்பதிப்பித்த உ.வே.சா முதலானவர்கள் பல இசைச்செய்திகளைத்தெளிவுபடுத்துகின்றனர்.சிலப்பதிகாரத்தில் பொதிந்துள்ள இசைச்செய்திகளை ஒவ்வொரு அறிஞர்களும் விளக்கபுகுந்து,அவரவர்களுக்குக்கிடைத்த சான்றுகளின் துணைகொண்டு விளக்கியுள்ளனர்.உ.வே.சாவால் விளக்கமுடியாத இடங்கள் ஆபிரகாம்பண்டிதராலும்,விபுலானந்தராலும்,குடந்தை ப.சுந்தரேசனாராலும்,வீ.ப.கா.சுந்தரம் அவர்களாலும் விளக்கம் பெற்றுள்ளன.பஞ்சமரபு என்னும் நூல் 1972,1991 இலும் இருமுறை பதிப்பு கண்டுள்ளது.இரண்டாம்முறையாக(1991)பஞ்சமரபு வீ.ப.கா.சுந்தரம் உரையுடன் வெளிவந்தபொழுது சிலப்பதிகாரத்தின் பல இடங்கள் விளக்கம் பெற்றன.அதிலும் சிறு திருத்தங்கள் செய்யவேண்டிய பகுதிகள் உள்ளதை நுட்பமாகச்சிலம்பையும்,பஞ்சமரபையும் கற்கும்பொழுது தெரியவருகின்றது.பேராசிரியர் மு.அருணாசலம்பிள்ளை அவர்கள் பஞ்சமரபு வெண்பாக்கள் 24 சிலப்பதிகாரத்தில் உள்ளது எனச்சிலம்பு ஏழாம் பதிப்பில் இணைப்பாகத்தந்துள்ளார்.ஆனால் வீ.ப.கா.சுந்தரம் 31 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறார்.வீ.ப.கா.சு காட்டும் எண்ணிக்கையில் மிகுந்து பஞ்சமரபு வெண்பாக்கள் சிலம்பில் இடம்பெற்றுள்ளன(பின்பு இது பற்றி விளக்குவேன்).
பஞ்சமரபு நூல்கிடைக்காமல் போயிருந்தால் சிலம்பு இசையின் உண்மைவரலாறு உணரமுடியாமல் போயிருக்கும்.அடியார்க்குநல்லார் பஞ்சமரபு வெண்பாக்களைக்காட்டும்பொழுது எந்தவகையான குறிப்பும் இல்லாமல் பாடலை மட்டும் காட்டுவதால் இது பஞ்சமரபு வெண்பா எனஉணரமுடியாமல் போகின்றது. பஞ்சமரபு நூலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுதே உண்மை வரலாறு உணரமுடிகிறது.
சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ்இலக்கணம் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதுபோல் அவ்விலக்கணத்திற்குப்பொருந்தும்படியான இசை உருப்படிகள் பலவும் இடம்பெற்றுள்ளன.இவ்வாறுகதையின் ஊடே இசையின் இலக்கணமும்,இசைப்பாடலும் கொண்ட ஒரு நூல் தமிழிலும் பிற மொழிகளிலும் இல்லை எனலாம்.
சிலப்பதிகார இசையிலக்கணத்துடன் ஒருபுடை ஒப்புமை கொண்ட இசையிலக்கண நூல்கள்
இசைநுணுக்கம் - சாரகுமாரன் அல்லது சயந்தகுமாரன் (அடியார்க்கு.) இந்திரகாளியம் - யாமளேந்திரர் பஞ்சமரபு - சேறை அறிவனார் பரதசேனாபதியம் -ஆதிவாயிலார் மதிவாணர் நாடகத்தமிழ்-பாண்டியன் மதிவாணனார்
சிலப்பதிகார நூலில் தமிழர்கள் பிரித்துப்பார்த்த ஐந்து நில மக்களின் வாழ்க்கை,அவர்தம் இசைமுறைகளை முறையாக இளங்கோவடிகளார் பதிவுசெய்துள்ளார்.முல்லை,குறிஞ்சி,மருதம்,நெய்தல்,பாலை எனும் ஐந்து நிலமக்களின் இசையை முறையே ஆய்ச்சியர்குரவையிலும்(முல்லையாழ்),நடுகற்காதை,குன்றக்குரவையிலும்(குறிஞ்சி),,வேனிற்காதையிலும்(மருதயாழ்),கானல்வரியிலும்(நெய்தலுக்குரியவிளரி,செவ்வழி) புறஞ்சேரியிறுத்தகாதையிலும்(பாலையாழ்) விளக்கியுள்ளார்.சிலப்பதிகார நூலுள் இசையிலக்கணச்செய்திகள் கொட்டிக்கிடப்பது போன்று அடியார்க்குநல்லார் வரைந்த பதிகவுரை மிகப்பெரும்இசைவரலாறுகளை உறுதிப்படுத்துகின்றது.அடியார்க்குநல்லார் உரைவழியும் அவ்வுரையின் துணைகொண்டு இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் வரைந்துள்ள இசைக்களஞ்சிய விளக்கங்கள்வழியும் தொடரந்து கற்றல் முயற்சியில் ஈடுபடும்பொழுது தமிழரின் இசைக்கருவூலம் சிலப்பதிகாரம் என்பதை அனைவருக்கும் தெளிவுப்படுத்தலாம்.
சிலப்பதிகார ஆசிரியர் மங்கலவாழ்த்துப்பாடலிலும் பிற காதைகளிலும் சிறுதொடர்கள் வழியாகக்கூட மிகப்பெரும் இசைஉண்மைகளைப்பதிவு செய்துள்ளார்.அத்தொடர்களில் உள்ள உண்மைகளை இன்றுவரை முற்றாக வெளிப்படுத்த இய
லாதவர்களாய் உள்ளோம். முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன வகலுண்மங்கல வணியெழுந்தது (46-47)என்னும் சந்த நயமிக்க தொடர்களைப் படிக்கும் போது கோவலன் கண்ணகி திருமணத்தில் முழங்கிய பல்வேறு இசைக்கருவிகள் இன்றும் நம் காதுகளில் ஒலித்தவண்ணம் உள்ளன. ஆடல் அரங்கையும் திரைச் சீலைகளின் அமைப்பையும் அடிகளார் தம் காப்பியத்தில் நிலையான வகையில் காட்சிப் படுத்தியுள்ளார்.

தொன்மை


தமிழ் மொழி, உலக முதன் மொழியாகும். அது, உலகத்தின் முதல் தாய்மொழியாகும். உயர்தனிச் செம்மொழியாகும். வரலாற்றிற்கு எட்டாத முதுபழந் தொன்மொழியாகும்.

தமிழ், உலகத்து இருளை அகற்றும் சுடராகும். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததான 'புறப்பொரும் வெண்பா மாலை' எனும் இலக்கண நூலின் ஆசிரியராகிய ஐயனாரிதனர், குறிஞ்சியும் முல்லையுங் கலந்த பாலை நிலத்து மறவர் குடியின் பழைமையைக் குறிக்கும் போது,

பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளொடு
முற்றோன்றி மூத்த குடி.

என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

குறிஞ்சி முல்லை வாணர் மிகப் பழைமையான தமிழ் வகுப்பார். அவர் குடியின் தொன்மை கூறவே, தமிழின் தொன்மையும் உடன் கூறியவாறாம்.

மேலும், இனி, முத்தமிழ்த் துறைபோகி முற்றத் துறந்து, மூவேந்தரையும் முத்தமிழ் நாட்டையும் ஒப்பப் புகழ்ந்த சேர முனிவர் இளங்கோவடிகள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இயற்றிய சிலப்பதிகாரத்துள்

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி.

என்று பாடியிருப்பது குமரிக்கண்டமே தமிழின் பிறந்தகம் என்பதும் தமிழின் முதுபழந் தொன்மையும் விளக்குகின்றது.

அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையிலும்,
’அக்காலத்து, அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானெனெ மலிந்த 
  1. ஏழ்தெங்க நாடும்,
  2. ஏழ்மதுரை நாடும்,
  3. ஏழ் முன்பாலை நாடும்,
  4. ஏழ் பின்பாலை நாடும்,
  5. ஏழ்குன்ற நாடும்,
  6. ஏழ்கண காரை நாடும்,
  7. ஏழ் குறும்பனை நாடும் 
 
என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி, கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிதலாற் குமரியாகிய பௌவமே என்றார் என்று உணர்க’

என்று 'தொடியோள் பௌவமும்' என்ற தொடருக்கு உரையாகச் சொன்ன செய்தியில் இருந்து, குமரிக்கண்டத்தில் இருந்த பஃறுளியாற்றிற்கும் குமரி ஆற்றிற்கும் இடைப்பட்ட தொலைவின் அளவும், பல்வேறு நிலப்பகுதிகளின் பெயர்களும் நமக்குத் தெரிகின்றன.

இவையெல்லாம் தமிழின் தொன்மை குறித்துத் தெளிவாகச் சொல்லும் தமிழ் இலக்கியச் சான்றுகளாம்.

பாவாணர் கண்டளித்த தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள்,
  • தொன்மை, 
  • முன்மை; 
  • எண்மை (எளிமை), 
  • ஒண்மை (ஒளிமை); 
  • இளமை, 
  • வளமை; 
  • தாய்மை; 
  • தூய்மை; 
  • செம்மை, 
  • மும்மை; 
  • இனிமை, 
  • தனிமை; 
  • நுண்மை, 
  • திருமை; 
  • இயன்மை, 
  • வியன்மை 
 என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை.

மூலம்: தமிழ் வரலாறு - திரு.தேவநேயப் பாவாணர்

பாவாணர் கண்டளித்த தமிழின் இப்பதினாறு சிறப்புப் பண்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

ஞா.தேவநேயப் பாவாணர்.


ஞா.தேவநேயப் பாவாணர், மொழிஞாயிறு எனப் போற்றப்பட்டவர்.

வேர்ச்சொல் ஆய்வு எனும் துறையைத் தொடங்கிய மூலவர்.

தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, முதற்றாய்மொழி - தமிழாக்க விளக்கம்,
பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்,
திருக்குறள் - தமிழ் மரபுரை

முதலிய பற்பல அரும்பெரும் நூல்களைப் படைத்த பேரறிஞர்.

தமிழே உலக முதன்மொழி, தமிழனே உலகத்து மூத்த குடி, குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம் என்ற முழக்கங்களின் மூலவர்.

தனித்தமிழ் இயக்கத்தின் தூணாகச் செயல்பட்டவர்.

:pray::pray::pray::pray::pray:

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

 
ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.

விளக்கம்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று மின்னேர் தனியாழி கொண்ட கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி என்றவாறு.

தண்டியலங்காரத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்ட பழம்பாடல்...