Monday, 5 December 2016

நெடுங்கணக்கு

உயிர்

அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ

ஒ ஓ

மெய்

க் ங்
ச் ஞ்
ட் ண்
த் ந்
ப் ம்
ய் ர் ல் வ் ழ் ள்
ற் ன்

உயிர்மெய்

க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங  .  .  .   .   .
ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ .  .  .  .  .  .   .   .
.
.
.
ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

ஆய்தம்


நெடுங்கணக்கு வைப்புமுறை


சிறப்பினாலும் இனத்தினாலும் ஆன முறைப்படி வைக்கப்பட்டதே தமிழ் நெடுங்கணக்கு ஆகும்.
முதல் எழுத்துகளான உயிரும் மெய்யும் ஆன முப்பதும் முதலில் வைக்கப்பட்டன.
அவற்றுள், தனித்து இயங்கும் சிறப்பு கொண்டதனால் முதலில் உயிர் எழுத்துகள் வைக்கப்பட்டன. அச்சிறப்பில்லா மெய்கள் அவற்றின் கீழே வைக்கப்பட்டன.

 

உயிர் எழுத்துகள் வைப்பு முறை:

அவ்வுயிர்களுள், அங்காத்தல் அதாவது வாயைத் திறத்தலால் உருவாகும் சிறப்பினதான அகரம் எல்லாவற்றுக்கும் முதன்மையாக வைக்கப்பட்டன.
அகர முதல வெழுத்தெல்லாம்
என்று வள்ளுவர் இதையே வழிமொழிவார்.
அடிப்படை உயிர்களான அ இ உ என்பன முதலில் வைக்கப்பட்டதன் காரணம் அவை பிறக்கும் முறைமையினால் என்க. (பிறக்கும் முறைமை என்றால் அவ்வொலிகளை நாம் எந்தெந்த உறுப்புகளின் முயற்சி கொண்டு பலுக்குகிறோம் என்பதே என்க)

அகரம் என்பது அங்காந்து கூறும் முயற்சியாலும், இகரம் என்பது அவ்வங்காப்போடு அண்பல்லில் அடிநாக்கு விளிம்பு உறுவதாலான முயற்சியாலும், உகரம் என்பது அவ்வங்காப்போடு இதழ் குவித்துக் கூறும் முயற்சியாலும் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.

ஆகார ஈகார ஊகாரங்கள், அகரம் முதலியவற்றிற்கு இனம் ஆதலின் அவற்றைச் சார வைக்கப்பட்டன.
முறை:

இனத்தினால் குறில்களுக்குப் பின் அவற்றின் இனமான நெடில்கள் வைக்கப்பட்டன.
அகரத்திற்கு ஆகாரம் இனம்
எகரத்திற்கு ஏகாரம் இனம்
ஒகரத்திற்கு ஓகாரம் இனம்.
அதன்படியே வைக்கப்பட்டன.

ஒரே இடத்தில் பிறந்த எழுத்துகள், ஒரே இனமாகக் கொள்ளப்பட்டன.

இன எழுத்துகள் - மெய்
க - ங
ச - ஞ
ட - ண
த - ந
ப - ம
ற - ன
என்பவை இன எழுத்துகள் என்று கண்டோம். இவற்றைச் சொல்லிப் பார்த்து இவை இரண்டும் ஒரே இடத்தில் பிறக்கும் உண்மையைக் கண்டு கொள்க.

 

 மெய் எழுத்துகளின் வைப்புமுறை

வலியவர் மெலியவருக்குப் பின்னே செல்வது போல வலிமைச் சிறப்பினால் க ச ட த ப ற எனும் வல்லின மெய்கள் முன்னாலும், அவற்றின் இன எழுத்துகளான ங ஞ ண ந ம ன ஆகிய மெல்லின எழுத்துகள் அவற்றின் பின்னாலும் முறையே வைக்கப்பட்டன. இடையினம் ஆறும் ஒரே இனமாதலால் அவை ஆறும் வரிசையாக ய ர ல வ ழ ள என்று வைக்கப்பட்டன. ஆனாலும், அவற்றைத் தனியே தொங்க விடக் கூடாது என்பதால், வல்லின மெல்லின இணையான 'ற ன' என்பதை அவற்றின் பின்னர் வைத்து, மெய் எழுத்துகளின் வைப்பு முறை அமைக்கப்பட்டது.

இதுவே சிறப்பினாலும் இனத்தினாலும் வைக்கப்பட்ட முறைமை ஆகும்.

இறுதி நிலை

இறுதி நிலை - சொல்லின் ஈற்றில் நிற்கும் எழுத்துகள்

எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினோரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துகளும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துகளாம்.

எ-டு.
விள,    பலா,     கிளி,    தீ,
கடு,       பூ,       சே,     கை,    நொ, 
போ,    வெள,   உரிஞ்,   மண்,
வெரிந்,  மரம்,   பொன்,  காய்,
வேர்,    வேல்,    தெவ்,  யாழ்,   வாள்.

இதனால், எந்த வல்லின மெய்யும், மொழிக்கு இறுதியில் நிற்காது என்பதை உணர்க.
அசோக், கிரீச், பிசரட், பிரசாந்த், பிரதாப் என்பன போன்றவை தமிழாகா என்றறிக.
இவற்றைப் பலுக்கிப் பார்த்து இவை விலக்கப்பட்டமை ஏன் என்றும் உணர்க.

இடைநிலை


இடைநிலை என்றால் என்ன?
அதாவது, ஒரு சொல்லுக்குள், எந்தெந்த எழுத்துகளை அடுத்து எந்தெந்த எழுத்துகள் வரக்கூடாது என்பதே இடைநிலையாம். இதன் சில நெறிகளைக் காண்போம்.

இடைநிலை நெறி 1:

வல்லின மெய்க்குப் பின் வேறு எந்த மெய்யும் வராது வராது வராது. க் ச் ட் த் ப் ற் எனும் ஆறு மெய்யெழுத்துகள் வல்லின மெய்களாகும். இவற்றை அடுத்து எந்த மெய் எழுத்தும் வராது என்க... உயிர்மெய்களே வருமென்க.
பயிற்ச்சி, புரட்ச்சி
 என்பன போன்ற பிழைகளை இந்நெறியின் வழி திருத்திக் கொள்ளலாம்.

இடைநிலை நெறி 2:

கசதப என்ற நான்கும் தம்மொடு தாமே மயங்கும். அதாவது, க், ச், த், ப் எனும் மெய் எழுத்துகளின் பின் அம்மெய்கள் கொண்ட உயிர்மெய்கள் மட்டுமே வரும். பிற உயிரமெய்கள் வாரா.
எ-டு: அக்கை, உச்சி, மெத்தை, உப்பு...

இடைநிலை நெறி 3:

ர, ழ என்ற இரண்டும் தம்மொடு பிறவே மயங்கும். ரகர ழகர மெய்கள், ரகர ழகர உயிர்மெய்களோடு சேரா. பிற உயிர்மெய்களோடு மட்டுமே சேரும்.

எ-டு: கூர்மரம், வாழ்நிலம்...

ஏனைய பன்னிரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கும். க, ச, த, ப, ர, ழ ஆகிய ஆறனைத் தவிர மற்ற மெய் எழுத்துகள் அதே மெய் கொண்ட உயிர்மெய்யோடு பிற உயிர்மெய்யோடும் வரும்.
எ-டு:
என்னை/என்று; அம்மா/அம்பு; என்பன போன்று.

இடைநிலை நெறி 4:

தனிக்குறிலை அடுத்து ரகர மெய்யும் ழகர மெய்யும் நிற்காது. நிற்காது என்று சொல்லப்பட்ட நெறியை மீறி நிற்பவை தமிழல்ல என்க.
எ-டு : அர்ச்சனை, கர்ப்பம் போன்ற பல வடமொழிகளை களைய இந்நெறி உதவும்.
மற்ற இடைநிலை நெறிகளைத், தக்க இலக்கண நூல்களுள் கண்டு கொள்க. நன்றி

முதனிலை

பன்னிரண்டு உயிரெழுத்துகளும், உயிரேறிய க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் ஒன்பது மெய்யெழுத்துகளும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துகளாகும். மற்றவை மொழிக்கு முதலில் வாரா...

எ-டு.

அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சான்று, ஞாயிறு, நன்மை, பூ, மணி, யாழ், வயல்.
எந்த மெய்யெழுத்திலும், எந்தத் தமிழ்ச்சொல்லும் தொடங்காவாம்.
ங, ட, ண, ர,ல, ழ, ள, ற, ன 
என்ற வரிசை உயிர்மெய்களைக் கொண்டு, எந்தத் தமிழ்ச்சொல்லும் தொடங்காவாம்.
இவைகளுள்ளே,

க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
  1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேள்வி, கை, கொண்டு, கோடை, கௌவை.
  2.  சட்டி, சாந்து, சினம், சீர், சுக்கு, சூரை, செக்கு, சேவல், சைவம், சொன்றி, சோறு,
  3.  தகை, தார், திரை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேடல், தையல், தொண்டு, தோடு, தௌவை.
  4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌவி.
  5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
  6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேடு, மையல், மொட்டு, மோனை, மௌவல்.

வகரமெய்

 வகரமெய் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.

யகரமெய் 

யகரமெய் ஆகாரத்தை கொண்டே பெரும்பாலும் முதலாகி வரும். 
யாழ், யாறு, யாது, யாக்கை, யானை.
ஆயினும் யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகிவரும் என்பது நன்னூல்.
 

ஞகரமெய்

ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.
எ-டு.
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

தமிழ்ச்சொற்கள்

தமிழின் ஒரு தனிச்சிறப்பு என்னவெனில், தமிழ்ச் சொற்கள் இன்னின்ன எழுத்துகளில் தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்துகளில் தான் முடிய வேண்டும், இன்ன எழுத்துகளின் பின் இன்ன எழுத்துகள் தான் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. வேறெம்மொழியிலும் இவை போன்ற கட்டுப்பாடுகள் இல்லை.
இவையே, எழுத்துக்களின் முதனிலை ஈறுநிலை இடைநிலை எனப்படுவதாம்.

Sunday, 4 December 2016

அளபெடை

தாம் கொண்ட ஓசையளவை விடக் குறைந்து ஒலிக்கும் எழுத்துகளான குற்றியலுகரம், குற்றியலிகரம் பற்றி இதுவரை கண்டோம். இனி, பாட்டிலோ உரையிலோ, ஓசை குறைந்த இடங்களில், அல்லது, ஓசை இனிமை வேண்டி, அல்லது, பெயரை வினையாக ஆக்க, சில உயிரெழுத்துகளும் ஒற்று எழுத்துகளும் (மெய் எழுத்துகள்), தம் மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும். அவ்வுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் ஒற்றெழுத்துக்கு ஒற்றளபெடை என்றும் பெயராம் என்க.
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
இக்குறளில் உள்ள ஓ எனும் நெடில் தனக்குரிய அளவான இரண்டு மாத்திரை அளவுக்கு ஒலிக்காது, நீண்டு, மூன்று மாத்திரை அளவு ஒலிப்பதாக உள்ளது காண்க. இதுவே உயிரளெபடை ஆகும்.

இங்கு ஓஒ என்பதில் முதலில் உள்ள ஓகார நெடிலை மட்டுமே நீட்டி ஒலித்தல் வேண்டும் என்றும், அதன் பின் உள்ள ஒகரம் என்பது அளபெடைக்கான குறியீடு மட்டுமே என்றும், அந்த ஒகரம் எனும் எழுத்தை ஒலித்தல் கூடாது என்றும் மனத்தில் இருத்துக.

இதே போல, இரண்டாம் அடியில் உள்ள 'தாஅம்' என்பதில் உள்ள தா எனும் உயிர்மெய்யெழுத்தின் ஆகாரம் மூன்று மாத்திரை அளவு நீண்டு ஒலிப்பதாகும் என்க. இங்குள்ள ஓஒ மற்றும் தாஅ இரண்டும் உயிரளபெடைகளாம் என்க. இவ்வளபெடைகளை அறிவிக்கும் குறியீடுகளாக, அளபெடுக்கும் நெடிலின் இனமான குறிலெழுத்து எழுதப்படும் என்க.
ஓஒ
தாஅ
என்றவாறு. இக்குறியீடுகளை ஒலித்தல் கூடாது. இக்குறியீடுகளின் அளவுக்கு முன்னுள்ள எழுத்தை நீட்டி ஒலிக்க வேண்டுமென்க. சில வேளை, குறில் நெடிலாகிப் பின்னர் அளபெடுக்கும்.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
இக்குறளில் அறளழீஇ புறனழீஇ என்பவற்றுள், அறனழி புறனழி என்ற இயல்பான சொற்களில் உள்ள ழி எனும் உயிர்மெய்க்குள் உள்ள இகரம், தன் அளவான ஒரு மாத்திரை அளவு ஒலிக்காது, நெடிலாகிப்பின் நீண்டு அளபெடுத்து, மூன்று மாத்திரை அளவு ஒலிப்பதைக் காண்க.
ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையினும் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும்.
எ-டு.
சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்ந்த.

குற்றியலிகரம்

உகரம் குறுகி அரைமாத்திரை ஒலித்துக் குற்றியலுகரமாதல் போல, இகரமும் குறுகி, குற்றியலிகரமாக, சிலவிடங்களில் அரைமாத்திரை ஒலிக்கும் என்க. குற்றியலுகரத்தில் முடியும் சொற்களை அடுத்து, யா எனும் யகர உயிர்மெய்யில் தொடங்கும் சொற்கள் வந்தால், நிலைமொழி முன்னால் நிற்கும் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரியும் என்க.

காட்டு:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
                                          - திருவள்ளுவர்.

இங்கு 'எனப்படுவது' எனும் சொல்லின் ஈற்றெழுத்தான உகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரமன்றோ. அதனை அடுத்து, யாதெனின் எனும் யகர மெய் வந்ததால்.

"எனப்படுவ தியாதெனின்" எனத் திரிந்து,
'தியாதெனின்' எனும் சீரின் முதல் இகரம், அரை மாத்திரை ஒலிக்கும் குற்றியலிகரமாக ஆகுமென்க. இதுவே குற்றியலிகரம் எனும் சார்பெழுத்து பிறக்கும் வழியாம் என்க.